Thursday, June 19, 2008

சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின் குரல்

சித்தாந்தன்
---------------------------------------------------------------

இலைகளையிழந்த வனத்தின் புதிர்ப்பாதைகளிலும்
சுவடுகளை உறிஞ்சும் பெரும் பாலையிலுமாக
பயணிக்க நேரிட்டது.

கழுதைகளை விடவும் அதிகம் சுமக்கப்பழகிவிட்டோம்
அல்லது அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்
நண்ப,
துப்பாக்கிச் சன்னங்கள் அலையும் தெருக்களில்
கத்திகளாய்முளைத்திருக்கும் பார்வைகளுக்குமிடையிலும்
நீ பேசிக்கொண்டிருந்தாய்
கைதுகளை
சித்திரவதைகளை
காலத்திற்கும் அகாலத்திற்குமிடையில்
ஒளி அவிந்து உருகும் வாழ்வை
சலனமற்ற இரவுகள்
நாய்களின் ஊளையால் நடுங்குவதை
தெருவின் கடைசிப்பயணியாய்
வீடு திரும்புதலின் நிச்சயமின்மையை

உன்னை சிலந்தி வலையில்
சிக்கித் தவிக்கும் ப+ச்சியாய் உணர்ந்தபோதும்
பாறையின் வேர்ஆழத்துள்ளிருந்து
உனது சொற்களை உருவாக்கினாய்

வன்முறையையையும் அதிகாரத்தையும்
கடைசிவரையிலும் எதிர்த்துக்கொண்டேயிருந்தாய்
நண்பனே
உனது பயணத்தின் சாட்சியாய் நீயே இருந்தாய்
உனது கவிதைகளின் அர்த்தமாய் நீயே இருந்தாய்
கடைசியில்
எரியும் காலத்தின் புகை உன்மீது படிந்தது
அவர்கள் வன்முறையின் உச்சக்குரலில் பேசினார்கள்
நீயோ
அதிகாரத்தின் குருதி முகத்தில் காறி உமிழ்ந்தாய்
முடிவில் உன்னைக் கொன்றார்கள்

ஓரு பறவையின் குரலை இழந்த துயரம்
எங்களில் படிந்து போனது
நீ அற்பமான காலத்தின் மகா கவிஞன்
அப்படித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
நண்ப,
உன் சொற்களுக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் பெருநதியில்
வாழ்வின் துர்க்கனவுகளுடன் கவிதைகள் மிதக்கின்றன.

---------------------------------------------------------------------


00குறிப்பு: சந்திரபோஸ் சுதாகர்

எஸ்போஸ், போஸ் நிஹாலே என அறியப்பட்ட 90 களின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராவார். 16.04.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் அவரின் மகனின் முன்னாலேயே வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

No comments: