Saturday, August 2, 2008

எஸ்போஸ்:கவிதைகள்


அழகிய இரவுபற்றிய எனது கவிதைகளில்
எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன
மிருகங்கள் பற்றிய அச்சத்தால் அழுகிச்சிதைந்தது நிலவு
நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்
நான் இழந்தேன்

எனது கவிதைகளின் காதலையோ
மனச் சுவர்களில் அவை புணரும் காட்சிகளையோ
அவற்றின் அந்தரங்களையோ
வெறியோடு தின்னுகின்றன மிருகங்கள்

துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின்
எல்லையற்ற விதி பற்றியும்
மிருகங்களுடனான அவனது வாழ்வு பற்றியும்
இன்றைய கவிதையை காற்றுத்தானும் எழுதவில்லை

எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய
கவிதைகளின்
பிரேதநதி இழுத்துச் சென்று விட்டது

நூறு தடவைகளுக்கு மேல் நிகழ்ந்தது எனது இறப்பு
நான் இறந்தேன் மீண்டும் மீண்டும்
நூறு தடவைகளுக்கு மேல்
மிருகங்கள் உடலைத் தின்னுகின்றன
கவிதைகளற்ற உடலை உயிரற்ற உடலை

No comments: