Monday, June 23, 2008

சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்

எஸ்போஸ்:கவிதைகள்


உன்னை அவர்கள் கைது செய்து

எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்

எனது குழந்தைக்குப் பிடித்தமான

உனது "சேட் கொலரின்" மடமடப்புச் சத்தம்

இன்னும் அவனுடைய விரலிடுககுகளில்

கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

அவர்கள் வாகனங்களோடு

நட்சத்திரங்களோ ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்

சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்

கொண்டு வைத்திருந்தார்கள்

அது

இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்

எனது குழந்தையின் கண்களில்

எங்களுடனேயே தங்கியிருக்கிறது.

அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்

நீண்ட கூரிய ஆயுதங்களால் தாங்கவும்

கொல்லவுங் கூடமுடியும்.

அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை

அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்

சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்

நிரூபித்து விட்டது …

நிரூபித்து விட்டது…

நம்பிக்கை கொள்

நீ பேசாதிருக்கும் வரை

உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை

அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே

சிறைக் கம்பியிடுக்குகளின் வழி

ரோஜாப் பூக்களின் வாசனையும்

வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்

உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்

நம்பிக்கை கொள்

நீ பேசாதிருக்கும் வரை

அவர்கள் தோற்றுப போவார்கள்

நிரந்தரமாகவே

------------------------
போஸ்நிஹாலே

கிளிநொச்சி

சரிநிகர் இதழ் 170
----------------------------

No comments: